சிறுவர்களின் வாழ்க்கை மலரட்டும்

உலகளவில், போர்களில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை போராளிகளாக பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டில் 27 ஆக இருந்து, 2007 இல் 17 ஆகக் குறைந்துள்ளதாக, சிறார் போராளிகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால், பல அரசாங்கங்கள், முக்கியமாக பர்மா, இன்னமும் சிறார்களை விடாப்பிடியாக போர்ப்படையில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது.

 
 

குறிப்பாக, மேற்காபிரிக்கா, இந்தோனேசியா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் சிறார்களை போராளியாகப் பயன்படுத்தும் மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

சர்வதேச சட்டங்கள் குறித்து அதிகரித்து வருகின்ற விழிப்புணர்வும், சிறார்களை போராளிகளாகப் பயன்படுத்தும் பட்சத்தில் எதிர்கொள்ளக்கூடிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளும் இந்த விடயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இன்னும் பல ஆயிரக்கணக்கான சிறார்கள், சில குறிப்பான அரசாங்கங்கள் மற்றும் கிளர்ச்சிக்குழுக்களின் படைகளில் செயற்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறர்கள்.

இவற்றில், பர்மா, இனக்குழுக்களைச் சேர்ந்த ஆயுதக்குழுக்களுக்கு எதிரான தனது சண்டைகளில், மிகவும் விடாப்பிடியாக, தொடர்ச்சியாக சிறார்களை பயன்படுத்தி வருகின்றது.

 
 

சாட், சுடான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மற்றும் சோமாலியா உட்பட பல ஆபிரிக்க அரசாங்கங்களும் தமது போர்ப்படையில் சிறார்களை பயன்படுத்தி வருகின்றன.

சாட் நாட்டு படையதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி வந்த செய்தி ஒன்றில், சிறார் போராளிகள் கூலி கேட்கமாட்டார்கள், எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டார்கள், கொல்லு என்று சொன்னால், மறு கேள்வி இல்லாமல் கொன்றுவிட்டுத்தான் மறு வேலையை அவர்கள் பார்ப்பார்கள், என்று அவர் கூறியிருக்கிறார்.

அரபுலகைப் பொறுத்தவரையில், ஏமன் நாடு தொடர்ச்சியாக இந்த விடயத்தில் குற்றம் செய்து வருகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக சண்டையிடும் ஒட்டு ஆயுதக்குழுக்களுக்கள் சிறார்களை பயன்படுத்துவதாகக் கூறும் இந்த அறிக்கை, அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தையும் விமர்சிக்கிறது.

 
 

இந்தச் சண்டையின் மறுபுறத்தில், விடுதலைப்புலிகளும், சிறார்களை துஷ்பிரயோகம் செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உகண்டா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், இராக், இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிளர்ச்சிக்குழுக்களைப் போன்று விடுதலைப்புலிகளும் சிறாரைப் படையில் பயன்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

நன்றி BBC