ஹர்பஜன்சிங் முறையீடு

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தமக்கு தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவும் நிலையில், இறுதியாக ஒரு வாய்ப்பை வழங்குமாறு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஹர்பஜன் சிங் முறையிட்டுள்ளார்.

ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த விவகாரம் குறித்து விசாரணை செய்துவரும் கமிஷ்னர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.

இந்நிலையில், தன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளும் விதமாக பிசிசிஐ-க்கு ஹர்பஜன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவத்துக்கு தாம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுவிட்டாதாகவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னதாக ‘தனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தரவேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷாவிடம் கேட்டபோது, ஹர்பஜன் நிறைய கடிதங்களை அனுப்பி வருவதாகவும், விசாரணை அறிக்கைக்காக தாம் காத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

10 சர்வதேச போட்டிகளில் தடை?

ஹர்பஜனுக்கு குறைந்தபட்சமாக ஐந்து டெஸ்ட் மற்றும் 10 சர்வதேச ஒருதினப் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், இந்திய கிரிக்கெட்டுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழாமல் இருக்க வழிவகுக்கப்படும் என்றும், ஹர்பஜனுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை, அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் காரணமாக, 11 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 மறுமொழி

  1. Roshini சொன்னது,

    மே 8, 2008 இல் 10:42 பிற்பகல்

    Nice Post !
    You should use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.


மறுமொழியொன்றை வழங்குக