வீரேந்திர ஷேவக் அபார சாதனை

                              fpn_mix4.jpg 
சேவக் அதிரடியில் சென்னை சேப்பாக்கம் அரங்கம் அதிர்ந்தது. தென் ஆப்ரிக்க பவுலர்களை புரட்டி எடுத்த இவர் அதிவேகமாக 300 ரன்களை எட்டி பல சாதனைகள் படைத்தார்.

இவரது சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர்களை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வெயில் கொடுமையில் தவித்த இவர்கள், இந்திய வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இன்றும் சேவக் ஆட்டம் தொடரும் என்பதால், இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடக்கிறது. ஹசிம் அம்லா 159 ரன்கள் எடுக்க, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 540 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. சேவக் தனது அதிரடியை தொடர்ந்தார். இவருக்கு வாசிம் ஜாபர் பக்கபலமாக இருக்க ஸ்கோர் மிக விரைவாக உயர்ந்து. “வேகப் புயல் டேல் ஸ்டைன் முதல் “சுழல்’ வீரர் பால் ஹாரிஸ் வரை யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கிய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 14வது சதம் கடந்தார். உணவு இடைவேளைக்கு பிறகு சேவக் “டாப்-கியருக்கு’ மாறினார். டேல் ஸ்டைன் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். இந்த நேரத்தில் அரைசதம் கடந்த வாசிம் ஜாபர்(73), பால் ஹாரிஸ் சுழலில் அவுட்டானார்.
அடுத்து வந்த டிராவிட் “கம்பெனி’ கொடுக்க, சேவக் ரன் மழை பொழிந்தார். மார்கல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசிய இவர், சிறித நேரத்தில் பால் ஹாரிஸ் ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்து அசத்தினார். இதை பார்த்த ரசிகர்கள் இது டெஸ்ட் போட்டியா…அல்லது “டுவென்டி-20′ போட்டியா என மெய்மறந்து போயினர்.

தொடர்ந்து விளாசிய சேவக், அதிவேக இரட்டை சதம் கடந்தார். இதற்கு பிறகும் வாணவேடிக்கை காட்டினார். நிடினி ஓவரில் ஒரு இமாலாய சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த இவர், 300 ரன்களை குறி வைத்தார். இவரை கட்டுப்படுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணானது. தனது பிரதான பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஏமாற்றிய நிலையில், பகுதிநேர பந்துவீச்சாளரான பிரின்சை அழைத்தார். இந்த ஒவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய சேவக், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்(282) எடுத்தவர் என்ற சாதனை படைத்தார். 

பின்னர் தனது இலக்கை நோக்கி வெற்றிநடை போட்ட சேவக், அதிவேகமாக 300 ரன்களை எட்டி சாதித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 468 ரன் எடுத்து இருந்தது. சேவக் 309(41 பவுண்டரி, 5 சிக்சர்), டிராவிட் 65 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க ஸ்கோரை(540) எட்ட இந்திய அணிக்கு இன்னும் 72 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இன்று காலை சேவக் அதிரடியை தொடரும் பட்சத்தில் ஸ்கோர் “ஜெட்’ வேகத்தில் உயர வாய்ப்பு உண்டு. அடுத்து சச்சின், கங்குலி, லட்சுமண், தோனி போன்ற பேட்ஸ்மேன்கள் களமிறங்க இருப்பதால், இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டலாம். பின்னர் துணிச்சலாக “டிக்ளேர்’ செய்யும்பட்சத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலைடு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கையோடு சென்னையிலும் கலக்கியுள்ளார் சேவக். இதற்கு, சாதித்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து சேவக் அளித்த பேட்டி: அணியிலிருந்து நான் நீக்கப்பட்ட போது மிகவும் வேதனைப் பட்டேன். ஆனால், இதுவே சாதித்து காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தையும் எனக்கு அளித்தது.

எனது விளையாட்டில் மிகுந்த கவனம் செலுத்தினேன். இந்திய அணியில் மீண்டும் என்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். தென் ஆப்ரிக்காவின் ஸ்கோரை(540) நெருங்கி விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் என்னுடைய இன்னிங்சை விளையாடினேன். கேப்டன் கும்ளே என்னுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடும் படி கூறியிருந்தார். அதே நேரம் ரன் விகிதம் நன்றாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தேன். சேப்பாக்கம் ஆடுகளமும் சாதகமாக இருந்தது. இவ்வாறு சேவக் கூறினார். 

சென்னை சேப்பாக்கம் அரங்கில் அதிக ரன்(309) எடுத்தவர் என்ற சாதனை படைத்தார் சேவக். முன்னதாக இந்தியாவின் கவாஸ்கர் 1983-84ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 236 ரன் எடுத்து இருந்தார்.

இந்தியா சார்பில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்(309) எடுத்தவர் என்ற சாதனையை ஏற்கனவே முல்தான் டெஸ்டில் சேவக் நிகழ்த்தினார். தற்போது மீண்டும் 309 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்துள்ள இவர், இந்திய மண்ணில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இவர் லட்சுமண் சாதனையை(281, எதிர் ஆஸி., கோல்கட்டா) தகர்த்தார். 

நேற்று சேவக்-ஜாபர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்தது. பின்னர் சேவக்-டிராவிட் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கும் மேல் சேர்த்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதலிரண்டு விக்கெட்டுகளுக்கு 200 ரன்களுக்கும் மேல் எடுக்கப்படுவது இது தான் முதல் முறை. 

சேவக்கின் கிரிக்கெட் வாழ்வில் நேற்று பொன்னான நாள். சாதனை மேல் சாதனை படைத்து அசத்தினார். 309 ரன்கள் எடுத்த இவர், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 300 ரன்கள் அடித்த மூன்றாவது வீரரானார். முன்னதாக இவர் பாகிஸ்தானுக்கு எதிரான முல்தான் டெஸ்டில்(2004) 309 ரன் எடுத்தார். இவரை தவிர ஆஸ்திரேலியாவின் பிராட்மேன்( 334 ரன், எதிர் இங்கி., 1930 மற்றும் 304 ரன், எதிர் இங்கி.,1934), வெஸ்ட் இண்டீசின் லாரா(375 ரன் எதிர் இங்கி., 1994 மற்றும் 400 ரன் எதிர் இங்கி., 2004) ஆகியோர் மட்டுமே 2 முறை 300 ரன்களை கடந்துள்ளனர்.

நன்றி – தினமலர்